செய்திகள்
மாணவி தற்கொலை

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2021-11-12 10:40 GMT   |   Update On 2021-11-12 10:40 GMT
கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் கடிதம் எழுதி வைத்து விட்டு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை உக்கடம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். சமையல் தொழிலாளி. இவரது மகள் பொன்தாரணி (வயது 17).

இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த பொன்தாரணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உக்கடம் போலீசார் மாணவியின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் சில மாணவிகளின் உறவினர்களின் பெயர்களையும், ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களை சும்மா விடக்கூடாது என மாணவி எழுதி இருந்தார்.

மாணவி பொன்தாரணிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதனால் மனம் உடைந்தே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் நிறைமதி புகார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

எனது மகள் பொன்தாரணி முதலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தது. அப்போது இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர், பொன்தாரணியிடம் வீடியோவில் தவறாக பேசி உள்ளார். அந்த விவரத்தை பொன்தாரணி எங்களிடம் தெரிவிக்கவில்லை.

நேரடி வகுப்பு தொடங்கிய பிறகு ஒருநாள் மாலை வீடு திரும்புவதற்காக பள்ளிக்கு வெளியே பொன்தாரணி காத்திருந் திருக்கிறாள். அப்போதும் அந்த ஆசிரியர் வந்து உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று அழைத்து வந்திருக்கிறார்.

மற்றொரு நாள் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி அவர் அழைத்து இருக்கிறார். அதனை நம்பி பள்ளிக்கு சென்ற எனது மகளை அந்த ஆசிரியர் தனியாக அழைத்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது மகள் அவரிடம் இருந்து தப்பி வந்து விட்டாள்.

அதன்பிறகு ஆண்களை பார்த்தாலே ஒருவித அச்ச உணர்வுடன் இருந்தாள். ஆசிரியர் செய்த இழிசெயலை நினைத்து மன வேதனையுடன் காணப்பட்டாள். இந்த விவரங்களை எனது மகள், தன்னுடன் படித்த எங்கள் பகுதியைச் சேர்ந்த சக மாணவரிடம் தெரிவித்து அழுது இருக்கிறாள். அந்த மாணவர் மூலமே எங்களுக்கு இந்த விவரங்கள் தெரியவந்தது.

பின்னர் நாங்கள் பொன் தாரணியை, அந்த பள்ளியில் இருந்து மாற்றி மாநகராட்சி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தோம். ஆனால் ஆசிரியர் செய்த அத்துமீறலை மறக்க முடியாமல் அவள் வேதனையுடன் காணப்பட்டாள். நேற்று கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டாள். எனவே மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறி உள்ளார்.

இந்த புகார் தொடர்பாக ஆசிரியரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் தன்னுடன் படித்த மாணவிகளின் உறவினர்கள் பெயரையும் கடிதத்தில் மாணவி குறிப்பிட்டு இருந்தார். அவர்களாலும் மாணவி பாதிக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Tags:    

Similar News