செய்திகள்
கமலா ஹாரிஸ் பதவியேற்பு - துளசேந்திரபுரத்தில் விளக்குகள் ஏற்றி கொண்டாடிய கிராம மக்கள்
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிகழ்வை அவரது தாயின் பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவாரூர்:
அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்ற நிகழ்வை அவரது தாயின் பூர்வீக கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
கமலா ஹாரிஸ் தாயாரின் பூர்வீக கிராமமான திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்கு கமலா ஹாரிஸ் பதவியேற்கும் நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்து பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவை ஒட்டப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கோலங்கள் வரைந்து கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் விளக்குகள் ஏற்றி வைத்து பண்டிகை போல கொண்டாடி வருகின்றனர். தங்கள் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கமலா ஹாரிஸ் தாயார் ஷியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். கமலா ஹாரிசின் தாய் வழி தாத்தா திருவாருர் மாவட்டத்தை சேர்ந்தவர். அங்குள்ள பைங்காநாடு கிராமத்தில் இருக்கும் துளசேந்திரபுரத்தை சேர்ந்தவர்தான் கமலா ஹாரிசின் தாத்தா கோபாலன். இவர் ஆங்கிலேயர் காலத்திலேயே சிவில் சர்வீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.