செய்திகள்
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் வழக்கை விசாரிக்க எதிர்ப்பு- தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்த நீதிபதி

Published On 2020-01-13 08:06 GMT   |   Update On 2020-01-13 09:56 GMT
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க மறுத்து தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். இவரது மனைவி ஸ்ரீநிதி. இருவரும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015-ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு ஏக்கருக்கு தலா ரூ.4.25 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர்.

ஆனால் சந்தை மதிப்பின்படி ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் பெற்ற ரொக்கப்பணம் ரூ.6.38 கோடியும், அவரது மனைவி ஸ்ரீநிதி பெற்ற ரொக்கப்பணம் ரூ. 1.35 கோடியும் வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

அவர்கள் இருவர் மீதும் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரமும், ஸ்ரீநிதியும் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் இந்த வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் தொடர்புடைய நிறுவனத்தின் சார்பில் நீங்களே வழக்குரைஞராக இருந்துள்ளீர்கள், எனவே இந்த வழக்கை நீங்கள் விசாரிப்பது முறையாகாது எனக்கூறி வாதிட்டனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News