உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டையில் பிபின் ராவத், ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்
புதுக்கோட்டை காமராஜபுரம் 3ம் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிபின் ராவத் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து, அனைவரும் மரியாதை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது உடல்கள் டெல்லியில் உள்ள அவர்களின் வீட்டில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலிக்கு பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனம் மூலம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதேசமயம், பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அவ்வகையில் புதுக்கோட்டை காமராஜபுரம் 3ம் வீதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிபின் ராவத் புகைப்படத்துடன் கூடிய பேனர் வைத்து, அனைவரும் மரியாதை செலுத்தினர்.