செய்திகள்
‘சின்னக் கலைவாணர்’ விவேக் விரைவில் நலம்பெற வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
நடிகர் விவேக் நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய 'எக்மோ' கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்னும் 24 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து முழுமையான அறிக்கையை தெரிவிக்க முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சமூக சீர்திருத்தக் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் ‘சின்னக் கலைவாணர்’ விவேக் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை அறிந்து வருத்தமுற்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விரைவில் முழுமையான நலன் பெற்று தனது கலைச் சேவையையும், சூழலியல் பணிகளையும் தொடர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.