செய்திகள்
கவிதிரன் - கள்ளக்காதலர்கள் அபர்ணா- சுரேஷ்.

துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 4 வயது சிறுவன் படுகொலை - கள்ளக்காதலனுடன், தாய் கைது

Published On 2021-07-28 19:04 GMT   |   Update On 2021-07-28 19:04 GMT
தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி 4 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டான். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சிறுவனின் தாய், கள்ளக்காதலனுடன் கைதானார்.
வெளிப்பாளையம்

நாகையில், நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31). இவர், கார் மற்றும் வாகனங்களுக்கு ‘டிங்கரிங்’ வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாமரைகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த அபர்ணா(22) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான ஒரு ஆண்டிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து வைத்ததன்பேரில் தாமரைகுளம் தென்கரை பகுதியில் மீண்டும் சேர்ந்து குடும்பம் நடத்தினர். இந்த தம்பதிக்கு 4 வயதில் கவிதிரன் என்ற மகன் இருந்தான்.

கார்த்திக் அரவிந்த், சென்னையில் தங்கி இருந்து ‘டிங்கரிங்’ வேலை பார்த்து வருகிறார். அபர்ணா தனது குழந்தையுடன் தாமரைகுளம் தென்கரை பகுதியில் வசித்து வந்தார்.இந்த நிலையில் தாமரைகுளம் மேல்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்(24) என்பவருடன் அபர்ணாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நாகை காடம்பாடி சூர்யா நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக கணவன்-மனைவி போல் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கார்த்திக் அரவிந்த், அவசர போலீஸ் தொலைபேசி எண் 100 மூலம் நாகை வெளிப்பாளையம் போலீசாரை தொடர்பு கொண்டு தனது குழந்தையை, மனைவி அபர்ணா கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார், கள்ளக்காதல் ஜோடி குடும்பம் நடத்தி வந்த காடம்பாடி சூர்யா நகர் பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல் ஜோடி சுரேஷ்-அபர்ணா ஆகிய இருவரும் நேற்று முன்தினம் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அபர்ணாவின் மகன் கவிதிரன் அழுது கொண்டு அவர்களது சந்தோஷத்துக்கு இடையூறாக இருந்துள்ளான். இதனால் கள்ளக்காதல் ஜோடியால் உல்லாசமாக இருக்க முடியவில்லை. இதன் காரணமாக கள்ளக்காதல் ஜோடியினர் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.

அப்போது சுரேஷ், சிறுவன் கவிதிரனை தள்ளி விட்டுள்ளார். அபர்ணாவோ, தான் பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் தனது சுகபோகத்திற்காக சுடிதார் துப்பட்டாவால், சிறுவனின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அந்த சிறுவன் இறந்து விட்டான்.

காம இச்சையால் இத்தகைய படுபாதக செயலை செய்த அபர்ணா, தான் செய்த இந்த கேவலமான செயலை எண்ணி கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இந்த கொலையை மறைக்க முடிவு செய்த அபர்ணா தனது குழந்தை எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதாக கூறி சிறுவனின் உடலை அடக்கம் செய்ய முயன்றுள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சென்னையில் வசித்து வந்த கார்த்திக் அரவிந்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக போலீசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அபர்ணாவையும், அவருடைய கள்ளக்காதலன் சுரேசையும் நேற்று கைது செய்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் தான் பெற்ற குழந்தையை தாயே துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் நாகை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News