செய்திகள்
கோப்புப்படம்

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு

Published On 2021-05-10 18:29 GMT   |   Update On 2021-05-10 18:45 GMT
மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசத்தை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் இன்று (10.05.2021) முதல் 24.05.2021 வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த 31.05.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி கால நீட்டிப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, அமைச்சர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அவர்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் நடத்திய கலந்தாய்வில் வெளியிட்ட வழிமுறைகள் கீழ்வருமாறு:



அ) தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.05.2021 முதல் 24.05.2021 வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த 31.05.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றிகாலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

ஆ) மேலும், ஏற்கனவே மின்நுகர்வோர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல், கைபேசி வங்கியியல், பேமண்ட் கேட்வே, பிபிபிஎஸ் முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின்நுகர்வோர்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

இ) 10.05.2021 முதல் 24.05.2021 வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள், மே 2019-ம் ஆண்டில் (கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும். புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி அதாவது மார்ச் 2021-ன் கணக்கீட்டுப்படி மின்கட்டணம் செலுத்தலாம்.

இவ்வாறு செலுத்த வேண்டிய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது மே 2021-ற்கான கட்டணம் ஜூலை 2021-ல் முறைபடுத்தப்படும். மே 2021-ற்கான கணக்கீட்டுத்தொகை விபரம் மின்நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

மேலும் மின்நுகர்வோர்கள் இந்த விபரத்தினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News