செய்திகள்
கோப்புபடம்

திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவர்கள் 2பேர் ஆற்றில் மூழ்கி பலி

Published On 2021-03-04 07:02 GMT   |   Update On 2021-03-04 07:02 GMT
திருவனந்தபுரம் அருகே பள்ளி மாணவர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வெள்ளநாடு பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவர்கள் சாங்கை பகுதியை சேர்ந்த சூர்யா(வயது14), அக்‌ஷய் கிருஷ்ணா(14).

நேற்று மாலை இவர்கள் இருவரும் தங்களின் நண்பர்கள் 2பேருடன் வெளியன்னூர் உள்ளூர் கோணம் பகுதியில் உள்ள கரமனை ஆற்றில் குளிக்க சென்றனர். முதலில் அக்‌ஷய் கிருஷ்ணா ஆற்றில் இறங்கினார். அப்போது அவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனைப்பார்த்த சூர்யா, அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றுக்குள் குதித்தார். அப்போது அவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை ஆற்றின் கரையில் நின்று கொண்டிருந்த அவர்களது மற்ற நண்பர்கள் 2பேரும் பார்த்து அலறினார்கள்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களை ஆற்றில் தேடினர். மாணவர்கள் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் இருவரையும் இறந்தநிலையிலேயே மீட்க முடிந்தது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2மாணவர்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் இருவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News