செய்திகள்
தமிழக அரசு

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு

Published On 2019-11-13 08:04 GMT   |   Update On 2019-11-13 08:04 GMT
தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் அந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட தாலுகாக்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • செங்கல்பட்டு புதிய மாவட்டத்தில் 3 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.
  • வேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது




சென்னை:

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8-ந்தேதி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.



இந்த நிலையில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரிப்பதாக தெரிவித்தார்.

வேலூரை தலைமை இடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு மற்றொரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும் என்றார்.

புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.

எந்தெந்த வருவாய் கோட்டங்கள், தாலுகா அலுவலகங்களை புதிய மாவட்டத்தில் சேர்ப்பது என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வந்தன. இதன் அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் புதிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகா இடம் பெற்றுள்ளது என்ற விவரத்தை அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையில் இதுபற்றி கூறி இருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்ட தலைநகராக செங்கல்பட்டு அமையும். இதில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.

தாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் (புதிது), மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக காஞ்சிபுரம் செயல்படும்.

இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 வருவாய் கோட்டங்கள் செயல்படும்.

தாலுகா அலுவலகங்களை பொறுத்தவரை காஞ்சிபுரம், உத்திரமேருர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் (புதிது) இடம் பெறுகிறது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் தவிர குடியாத்தம் புதிய வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு தாலுகாகளும், புதிதாக கே.வி.குப்பம் தாலுகாவும் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

கே.வி.குப்பம் தாலுகாவில் கே.வி.குப்பம், வடுகன்தாங்கல் ஆகிய 2 பிர்க்காக்களில் உள்ள கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குடியாத்தம் புதிய வருவாய் கோட்டத்தில் பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி மற்றும் ஆம்பூர் தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வாணியம்பாடி வருவாய் கோட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலுகாவில் உள்ள 95 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் புதிதாக உருவாக்கப்படும் அரக்கோணம் வருவாய் கோட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய தாலுகாக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் புதிய வருவாய் கோட்டத்தில் அரக்கோணம், நெமிலி தாலுக்காவுக்கு உட்பட்ட 145 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவான மாவட்டங்களை சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன. அவை வருமாறு:-

1. சென்னை, 2. காஞ்சிபுரம், 3. திருவள்ளூர், 4. திருவண்ணாமலை, 5. வேலூர், 6. விழுப்புரம், 7. கடலூர், 8. அரியலூர், 9. பெரம்பலூர், 10. திருச்சி, 11. புதுக்கோட்டை, 12, தஞ்சாவூர், 13. நாகப்பட்டினம், 14. திருவாரூர், 15. சேலம், 16. தருமபுரி, 17. கிருஷ்ணகிரி, 18. நாமக்கல், 19. கரூர், 20. ஈரோடு, 21. திருப்பூர், 22. கோவை, 23. நீலகிரி, 24. திண்டுக்கல், 25. மதுரை, 26. ராமநாதபுரம், 27. தேனி, 28. சிவகங்கை, 29. விருதுநகர், 30. திருநெல்வேலி, 31. தூத்துக்குடி, 32. கன்னியாகுமரி, 33. கள்ளக்குறிச்சி, 34. தென்காசி, 35. செங்கல்பட்டு, 36. திருப்பத்தூர், 37. ராணிப்பேட்டை.

Tags:    

Similar News