செய்திகள்
ஆயிஷா சுல்தானா

தேசத்துரோக வழக்கு- லட்சத்தீவில் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் ஆயிஷா சுல்தானா

Published On 2021-06-20 11:56 GMT   |   Update On 2021-06-20 11:56 GMT
லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக ஆயிஷா சுல்தானா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
கவராத்தி:

லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா படேல், அங்குள்ள மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் தவறான முடிவுகளை அமல்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். 



இந்நிலையில், லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் தயாரிப்பாளருமான ஆயிஷா சுல்தானா
, டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக பேசினார். லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிரான இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, முன்ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா சுல்தானா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரு வாரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கியதுடன், போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆயிஷா சுல்தானாவுக்கு உத்தரவிட்டது. அதன்படி லட்சத்தீவில் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் ஆயிஷா சுல்தானா.


ஆயிஷா சுல்தானாவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கு "தவறானது மற்றும் நியாயமற்றது" என்று கூறி, லட்சத்தீவில் உள்ள பல பா.ஜனதா தலைவர்கள் ராஜினாமா செய்தனர். ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என கேரள மந்திரி சிவன்குட்டி வலியுறுத்தி உள்ளார். 
Tags:    

Similar News