செய்திகள்
விபத்து

கணவனுடன் சென்ற கர்ப்பிணி பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

Published On 2021-09-04 10:18 GMT   |   Update On 2021-09-04 10:18 GMT
ஆரணி அருகே கணவனுடன் சென்ற கர்ப்பிணி பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளி பஸ் டிரைவர். இவருடைய மனைவி பிரியா (வயது 22). இவர்களுக்கு சுஜித் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். பாபு தனது மனைவி பிரியா மற்றும் மகன் சுஜித் ஆகியோருடன் நேற்று வேலூர் - ஆரணி நெடுஞ்சாலையில் குண்ணத்தூர் கூட்ரோடு அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

குண்ணத்தூர் கூட்ரோடு அருகே தற்போது சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதனால் அங்கிருந்த வேகத்தடையில் இருந்த எதிரொலிப்பான் தெரிவதில்லை. இதனால் பாபு சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பிரியா கீழே விழுந்துள்ளார்.

அப்போது வேலூரிலிருந்து ஆரணி நோக்கி சென்ற அரசு பஸ்சின் பின்சக்கரத்தில் பிரியா சிக்கினார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News