செய்திகள்
கோப்புபடம்

ராமநத்தம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1½ லட்சம் திருட்டு

Published On 2021-10-14 08:58 GMT   |   Update On 2021-10-14 08:58 GMT
ராமநத்தம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1½ லட்சம் திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநத்தம்:

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே உள்ள செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 47). இவர் ராமநத்தம் அருகே பெரங்கியத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு 8 மணி அளவில் வேலை முடிந்ததும், கடையில் வசூலான ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 630 ரூபாயை, பையில் வைத்துக் கொண்டு கடையை பூட்டினார். பின்னர் அவர் கடையின் அருகில் நிறுத்தியிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் ஒயர் அறுந்து கிடந்ததால், பிரசன்னா பணம் இருந்த பையை மோட்டார் சைக்கிள் பெட்டியின் மீது வைத்து விட்டு, சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், மோட்டார் சைக்கிள் பெட்டியின் மீது வைத்திருந்த பணத்தை திருடினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசன்னா, திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இதுகுறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா, ராமநத்தம் இன்ஸ்பெக்டர் ஜெயகீர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News