செய்திகள்
கொரோனா 2-வது அலை பரவாமல் தடுக்க தமிழக-கேரளா எல்லைகளில் 26 இடங்களில் தீவிர சோதனை
கொரோனா 2-வது அலை பரவாமல் தடுக்க தமிழக-கேரளா எல்லைகளில் 26 இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது, மராட்டியம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் 2-ம் அலை கொரோனா அதிகரித்து வருகிறது. இருந்தாலும், தமிழகத்தில் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது.
2-ம் அலை தமிழகத்தில் பரவாமல் தடுக்க, தமிழக எல்லைகளில் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், கேரளா-தமிழக எல்லைகளில் மட்டும் 26 இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில் சோதனைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ரெயில், பஸ் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் மக்கள் முககவசம் அணிந்துள்ளதை உறுதி செய்ய, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.