செய்திகள்
தற்கொலை

சுசீந்திரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை

Published On 2021-06-13 07:15 GMT   |   Update On 2021-06-13 07:15 GMT
சுசீந்திரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்.ஜி.ஓ. காலனி:

சுசீந்திரம் அருகே சங்கரன் புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 25). இவர், தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இதே அலுவலகத்தில் தேரூரைச் சேர்ந்த வித்யா (30) என்பவரும் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். வித்யாவுக்கு திருமணமாகி விட்டது. அவர் கணவருடன் தனியாக வசித்து வந்தார்.

அலுவலகத்தில் சுரேஷ்குமாரும், வித்யாவும் அடிக்கடி சந்தித்து பேசி கொள்வது வழக்கம். இதில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

சுரேஷ் குமார், வித்யா இடையேயான கள்ளக்காதல் விவகாரம் சுரேஷ்குமாரின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவரை பெற்றோர் கண்டித்தனர். மேலும் பேரூராட்சி வேலையை உதறிவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறும் கூறினர்.

பெற்றோர் கூறியதையடுத்து சுரேஷ்குமார் பேரூராட்சி அலுவலக வேலைக்கு செல்லாமல் கியாஸ் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். அப்போதும் கள்ளக்காதலியை யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் சுரேஷ்குமாருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர்.

இதற்காக தென்காசியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம்பேசி நிச்சயம் செய்தனர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுரேஷ்குமாருக்கு திருமணம் நடந்தது. தற்போது சுரேஷ்குமாரின் மனைவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஒரு சில மாதங்கள் கள்ளக்காதலியை சந்திக்காமல் இருந்த சுரேஷ்குமார், பின்னர் மீண்டும் வித்யாவை தொடர்பு கொண்டு அவரை சந்திக்க தொடங்கினார். மேலும் இருவரும் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று வந்தனர்.

இந்த விவகாரம் வித்யாவின் கணவருக்கு தெரியவந்தது. அவர் வித்யாவை கண்டித்தார். மேலும் சுரேஷ்குமாருடன் உள்ள தொடர்பை கைவிடும்படி எச்சரித்தார். இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் மாயமானார்கள்.

சுரேஷ்குமார், வித்யா இருவரும் மாயமானது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் கூடங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கூடங்குளம் சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் சுரேஷ்குமார், வித்யா இருவரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். வித்யா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கள்ளக்காதல் விவகாரத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News