செய்திகள்
ஷமியை பாராட்டும் விராட் கோலி

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் - கோலி பாராட்டு

Published On 2019-11-17 02:28 GMT   |   Update On 2019-11-17 02:28 GMT
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தூர்:

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி (7 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (3), உமேஷ் யாதவ் (4) ஆகியோர் மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வேகப்பந்து வீச்சாளர்களை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சு திறனில் உச்சத்தில் உள்ளனர். இவர்கள் பந்து வீசும்போது, எந்த ஆடுகளமும், நல்ல ஆடுகளமாகவே தோன்றுகிறது. அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

ஒவ்வொரு பகுதிகளிலும் நமது பவுலர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எந்த ஒரு கேப்டனும் இத்தகைய வலிமையான பந்து வீச்சைத்தான் விரும்புவார். இது பந்து வீச்சில் ஒரு கனவு கூட்டணி போன்று உள்ளது.

சாதனைகளையும், புள்ளி விவரங்களையும் ஒவ்வொருவரும் பார்க்கிறார்கள். அது தொடர்ந்து சாதனை புத்தகத்தில் தான் இருக்கும். நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை மென்மேலும் மேம்படுத்துவதை நோக்கி பயணிக்கிறோம். இதற்காக அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்துகிறோம்.

இந்திய அணிக்காக முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். பந்து பழசான பிறகு அதிகமாக ‘ஸ்விங்’ ஆகாது என்று கருதுகிறேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News