லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு வரும் மூளை வாதம்

குழந்தைகளுக்கு வரும் மூளை வாதம்... காரணமும்.. அறிகுறியும்...

Published On 2021-08-20 03:27 GMT   |   Update On 2021-08-20 03:27 GMT
போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.
அது என்ன மூளை வாதம்? பிறந்த குழந்தைக்கு எப்படி மூளையில் கோளாறு உண்டாகும்? தீர்வு இல்லையெனில் மேற்படி என்ன செய்ய வேண்டும்?
இதனால் குழந்தையின் வாழ்க்கை தரம் எவ்வாறு அமையும்? என அனைத்து கேள்விகளுக்குமான விடையை பற்றி இங்கே தெளிவாக தெரிந்துகொள்வோம்.

மூளை வாதம்...

*செரிபரல் பால்சி (cerebral palsy) என்று மருத்துவ உலகம் அழைக்கும் இந்த மூளை வாதமானது குழந்தையின் வளரும் மூளைக்கு வரக்கூடிய மூளை சேதம் ஆகும்.

*மேலும் இது ஒரு குழுவாக உடலியல் கோளாறுகளை உள்ளடக்கியது. உதாரணமாக உடல் அசைவுகள், அறிவுத் திறன், விழித்திறன், பேச்சுத்திறன் சார்ந்த குறைபாடுகள் என பல பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது.

காரணங்கள்...

* சிசு பிறக்கும் முன், பிறக்கும் போது, பிறந்த பின் என மூன்று கட்டங்களிலும் சி.பி. என சொல்லக்கூடிய செரிபரல் பால்சி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* போதுமான பிராண வாயு குழந்தை பிறக்கும்போது இல்லாமல் போவதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறையும். இதனால் மூளை திசுக்கள் சேதமடையும்.

* பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுகள் குழந்தையின் மூளையையும், மூளையை போர்த்தியுள்ள திசுவையும் பாதிக்கும்போது ஏற்படலாம்.

* கர்ப்ப காலத்தில் தாய்க்கு ஏற்படும் தொற்று நோய்களாலும்
குழந்தை
க்கு சி.பி. வரக்கூடும்.

* முன்கூட்டியே பிறக்கும் (pre mature) குழந்தைகளுக்கு எளிதில் மூளை செல்களில் சேதம் ஏற்பட வாய்ப்புண்டு.

* நஞ்சுக்கொடி சுற்றிக் கொண்ட சிசுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூளை செல்கள் சேதம் அடையும்.

* குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுக்கும்போது மூளை சேதம் உண்டாகலாம். சாதாரண முறை சுகப்பிரசவமாக இருந்தாலும் அல்லது கருவிகள் கொண்டு குழந்தையை வெளியே கொண்டுவரும் பிரசவமாக இருந்தாலும் சரி, பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

* மஞ்சள் காமாலை இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் வரும் மூளை சேதம்.

குறிப்பு: எனவே, கருவுற்றதிலிருந்து குழந்தை பிறந்து ஓராண்டு வரை மேல் சொன்ன சிக்கல்கள் ஏற்பட்டால் சி.பி. வரலாம்.

அறிகுறிகள்...

* அறிகுறிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாறுபடலாம். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்படுகிறதோ அதற்கேற்ப அறிகுறிகள் வெளிப்படும்.

* தாமதமான மைல் கற்கள்தான் பிரதான அறிகுறி. அதாவது தாமதமாக கழுத்து நிற்பது, உட்காருவது, நடப்பது போன்ற வளர்ச்சிப் படிகள்.

* உடல் அசைவுகள்தான் பெரிதும் பாதிக்கும். இதனால் ஸ்திரத் தன்மை (balance), பாதிப்படையும். இதன் வெளிப்பாடாய் நடப்பதற்கு, உட்காருவதற்கு குழந்தை சிரமப்படும்.

* தோற்றப்பாங்கு (posture) உடல் முழுவதும் மாறக்கூடும். தசைகள் பாதிப்பதால் சரியான தோற்றப்பாங்கு இல்லாமல் இருப்பார்கள்.

* அறிவுத் திறன் சார்ந்த குறைபாடுகள்.

* சில குழந்தைகளுக்கு வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. வலிப்பில் பல வகைகள் உண்டு என்பதால் அதுவும் வெவ்வேறு வெளிப்பாடுகளுடன் இருக்கும்.

* பார்வைத் திறன் குறைபாடு.

* கேட்கும் திறன் குறைபாடு.

* பேச்சுத் திறன் குறைபாடு.

* வளைந்த முதுகுத்தண்டு.

* தசையையும் எலும்பையும் இணைக்கும் ‘தசை நாண் இறுக்கம்’. இது பொதுவாக கால் தசைகளில் ஏற்படும்.

* நடக்க முடியாமல் இருப்பது, நடக்க சிரமப்படுவது, கோணலாக நடப்பது.

சிகிச்சை முறை...

சி.பி.யை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் சிகிச்சைகளை தொடர்ந்து செய்து வரவேண்டும். மேலும் வாழ்நாள் முழுவதும் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News