செய்திகள்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுதினத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி கைது செய்தது.
அவரை காவலில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டால் தள்ளுபடி செய்யப்பட்டன. அவரது நீதிமன்ற காவலை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இதற்கிடையே ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, ரிஸ்கேஷ்ராய் ஆகியோரை கொண்ட பெஞ்ச், ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது சி.பி.ஐ. பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
நேற்று நடைபெற்ற ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.