நாகையில் தலைமை ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகைகள்-ரூ1½ லட்சம் கொள்ளை
நாகப்பட்டினம்:
நாகை வெளிப்பாளையம் ராமர் மடம் கீழ் சந்து பகுதியை சேர்ந்தவர் இளமாறன் (வயது 51). இவர் நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி அமுதா. நாகையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 30 பவுன் நகைகள் மற்றும் 1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பியபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகள்- பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து இளமாறன் வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.