செய்திகள்
செயின் பறிப்பு

கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 1 1/2 பவுன் நகை பறிப்பு

Published On 2019-11-06 14:29 GMT   |   Update On 2019-11-06 14:29 GMT
கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 1 1/2 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் பறித்து சென்றனர்.
நாகர்கோவில்:

கொல்லங்கோடு அருகே உள்ள கலவனம்சேரி பகுதியை சேர்ந்தவர் மரிய ஜெயா. இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை அவர் வழக்கம்போல கடைக்குச் சென்று வியாபாரத்தை கவனித்தார். அதன்பிறகு வீட்டிற்கு சென்று விட்டு இரவு 7 மணி அளவில் மீண்டும் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் சற்று குறைவான இடத்தில் மரிய ஜெயா சென்று கொண்டிருந்த போது அவரது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

மரியஜெயா அருகே மோட்டார் சைக்கிள் வந்ததும் அதை ஓட்டிவந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை மெதுவாக இயக்கத் தொடங்கினார். பின்னால் இருந்த வாலிபர், மரிய ஜெயாவின் கழுத்தில் கிடந்த 1 1/2 பவுன் தங்க நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய ஜெயா நகையை கையில் பிடித்துக் கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். மேலும் அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மரிய ஜெயாவின் 1 1/2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த துணிகர சம்பவம் பற்றி கொல்லங்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அதேப்போல நகையை பறி கொடுத்த மரிய ஜெயா தெரிவித்த கொள்ளையர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News