முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: 8 நாளில் 3 லட்சம் பேர் பிடிபட்டனர்
சென்னை:
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களிடம் போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 8-ந்தேதியில் இருந்து நேற்று வரையில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 750 பேர் சிக்கியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தலா ரூ.200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தெற்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியிலேயே அதிக அளவில் முககவசம் அணியாமல் பொதுமக்கள் சிக்கி உள்ளனர். 8-ந்தேதியில் இருந்து நேற்று வரையில் தென் மண்டலத்தில் மட்டும் 1 லட்சத்து 5 ஆயிரத்து 144 பேர் பிடிபட்டுள்ளனர்.
மற்ற மண்டலங்களில் இதில் இருந்து பாதி அளவுக்கே பொதுமக்கள் முககவசம் அணியாமல் பிடிபட்டுள்ளனர்.
மேற்கு மண்டலத்தில் 45 ஆயிரத்து 673 பேரும், மத்திய மண்டலத்தில் 50 ஆயிரத்து 350 பேரும், வடக்கு மண்டலத்தில் 58 ஆயிரத்து 740 பேரும், முககவசம் அணியாமல் பிடிபட்டுள்ளனர்.
நேற்று ஒரேநாளில் தெற்கு மண்டலத்தில் 14 ஆயிரத்து 581 பேர் சிக்கி இருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் 5,425 பேரும், மத்திய மண்டலத்தில் 6,041 பேரும், வடக்கு மண்டலத்தில் 6,788 பேரும் சிக்கி உள்ளனர்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்துக்காக கடந்த 8 நாட்களில் 11 ஆயிரத்து 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.