செய்திகள்
உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் - முருகனுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
வேலூர் சிறையில் இருக்கும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அறிவுறுத்தியுள்ளது.
சென்னை:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது. தன்னை தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டாக்டர்கள் குழுவினர் அவரது உடல் நிலையை கண்காணித்தனர். சாப்பிடாமல் இருந்ததால் முருகன் மிகவும் சோர்வாக காணப்படுகிறார்.
இதற்கிடையே, முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவரது உயிரை காப்பாற்ற மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என
அவரது உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த ஐகோர்ட், உண்ணாவிரதத்தை கைவிடும்படி முருகனுக்கு அறிவுறுத்தியது.
மேலும், முருகனை சந்திக்க மனைவி நளினி மற்றும் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு உத்தரவிட்டது.