செய்திகள்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தஞ்சையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-05 10:14 GMT   |   Update On 2020-11-05 10:14 GMT
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி தஞ்சையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மாநில செயலாளர் ராஜா தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உயர் கல்வி தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்யும் அரசாணையை திரும்ப பெற வேண்டும். மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதைபோல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

போராட்ட காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். பணி நியமன வயது வரம்பை 40 ஆக குறைத்துள்ள அரசிதழ் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள கழக மாநில தலைவர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் மாவட்ட அமைப்பு செயலாளர் சச்சிதானந்தம் நன்றி கூறினார்.
Tags:    

Similar News