செய்திகள்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அரிகிருஷ்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

பள்ளி மாணவி, மாணவர் மர்ம மரணம் - கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்

Published On 2021-11-25 13:45 GMT   |   Update On 2021-11-25 13:45 GMT
பள்ளி மாணவி, மாணவர் மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் மாணவரின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைச்சந்தை கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் அரிகிருஷ்ணன்(வயது 16). இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் மகள் நிவேதாவும்(16) அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இது பற்றி அறிந்ததும் கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து இருவரது உறவினர்களும் மாணவி, மாணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரிகிருஷ்ணனின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், அரிகிருஷ்ணன் கழுத்தில் காயம் இருப்பதாகவும், மாணவரை யாரேனும் கொலை செய்திருக்கலாம் என்றும், பிரேத பரிசோதனை முடிவை உடனடியாக கொடுக்க வேண்டும் என்றும், உரிய விசாரணை நடத்தி சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அனைவரையும் கலைத்தனர்.
Tags:    

Similar News