திருப்பத்தூர் அருகே சந்தனமர வேர்களை கடத்திய 2 பேர் கைது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள ஜவ்வாது மலை மாம்பாக்கம் காப்புக்காடு, பீட், புதூர்நாடு மலைப்பகுதிகளில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இதனை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டியும், சந்தன மர வேர்களை தோண்டி வெட்டி எடுத்து பைகளில் போட்டு கடத்தி செல்கின்றனர்.
இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மட்றபள்ளி வனவர் சஞ்சீவி தலைமையிலான குழுவினர் புதூர் நாடு மலை அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.
அப்போது ஜவ்வாது மலை நெல்லிவாசல் நாடு பகுதியை சேர்ந்த பழனி வேல்முருகன், வேடியப்பன் ஆகியோர் பைக்கில் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தபோது அதில் சந்தன மர வேர்கள் சிறிய சிறிய துண்டுகளாக வைத்திருந்தனர்.
இதனை மலைப்பகுதியில் இருந்து வெட்டி அவர்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.