செய்திகள்

களியக்காவிளை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2019-05-11 10:49 GMT   |   Update On 2019-05-11 10:49 GMT
களியக்காவிளை அருகே வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

நாகர்கோவில்:

களியக்காவிளையை அடுத்த மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஸ்ரீஜா ராணி (வயது 32). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள உறவினர் ஒருவர் திருமண வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் எடை உள்ள 3 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடை உள்ள 2 கம்மல்கள், மற்றொரு மேஜையில் இருந்த ரொக்கப்பணம், ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு காமிரா எதுவும் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News