நகை வாங்குவது போல நடித்து நகைக்கடையில் வெள்ளி டம்ளரை திருடிய கணவன்-மனைவி கைது
கோவை:
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (வயது 41).
இவர் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு நகை வாங்குவதற்காக ஒரு தம்பதி வந்தனர். அவர்கள் ரவியிடம் வந்து வெள்ளி பொருட்கள் வேண்டும் என்று கேட்டனர்.
அவர் எடுத்து காண்பித்து கொண்டு இருந்த போது திடீரென 2 பேரும் சேர்ந்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை திருடி தப்பிச் செல்ல முயன்றனர். இதனை பார்த்த ரவி அந்த 2 பேரையும் கையும் களவுமாக பிடித்தார்.
பின்னர் 2 பேரையும் சாய்பாபா காலனி போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கண்ணன் (55). அவரது மனைவி செல்வி (48) என்பது தெரிய வந்தது.
போலீசார் 2 பேரையும கைது செய்து சிறையில் அடைத்தனர்.