செய்திகள்
பாஜக வாக்குகளை பிரிக்க தேர்தலில் போட்டியிடும் போராட்டக்காரர்கள் -அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு
அசாமில் பாஜகவின் வாக்குகளை பிரிப்பதற்காக போராட்டக்காரர்கள் வெவ்வேறு பெயர்களில் போட்டியிடுவதாக அமித் ஷா கூறினார்.
நாகோன்:
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, நாகோன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் தலைமையில், அசாமில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திலும் புதிய வளர்ச்சி தொடங்கியது. ஒரு காலத்தில், அசாம் என்றாலே கிளர்ச்சி மற்றும் வன்முறைக்கு பெயர் பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்தது. இப்போது வளர்ச்சிக்கான மாநிலமாக மாறியிருக்கிறது.
பிரதமர் மோடி அசாமை கவுரவிக்க எல்லாவற்றையும் செய்தார். பூபென் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் தருண் கோகாயும் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
காங்கிரசை வெற்றி பெறச்செய்ய, பாஜகவின் வாக்கு சதவீதத்தை குறைக்க, போராட்டக்காரர்கள் வெவ்வேறு பெயர்களில் போட்டியிடுகின்றனர். காங்கிரசை வெற்றி பெறச் செய்வதே அவர்களின் நோக்கம். அவர்களால் அரசாங்கத்தை உருவாக்க முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கும் அது தெரியும். ஆனால் காங்கிரசை வெற்றி பெறச் செய்வதற்காக, பாஜகவின் வாக்குகளை பிரிப்பதற்கு அவர்கள் முயற்சிப்பது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.