செய்திகள்
பின்னலாடை பிரிண்டிங் கட்டண உயர்வு-22-ந்தேதி ஆலோசனை
தேவையான அளவு சாயம் கிடைக்காமை,விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு என திருப்பூர் பிரிண்டிங் துறையினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
பின்னலாடை பிரிண்டிங் கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருப்பூர் எக்ஸ்போர்ட் நிட் பிரிண்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) சங்க தலைவர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
வெளிநாடுகளில் இருந்து சாயங்கள், சாயம் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் சாயம் விலையும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
தேவையான அளவு சாயம் கிடைக்காமை,விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு என திருப்பூர் பிரிண்டிங் துறையினர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவருகின்றனர். முன்னரே தொகை செலுத்தி சாயங்கள் பெறவேண்டியுள்ளது. ஆனால் ஆடை உற்பத்தியாளர்களோ, பிரிண்டிங் கட்டணம் வழங்க நீண்டநாள் இழுத்தடிக்கின்றனர்.
புதிய ஆர்டர்களை கையாள்வதற்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. சாயங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப பிரிண்டிங் கட்டணத்தை உயர்த்தி வழங்கவும் ஆடை உற்பத்தியாளர்கள் தயங்குகின்றனர். இதனால் பிரிண்டிங் நிறுவனங்களுக்கு லாபம் இழப்பு ஏற்படுகிறது. ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து பிரிண்டிங் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்துவருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதேநேரம் அடுக்கடுக்கான பிரச்சினைகள் கவலையை ஏற்படுத்துகிறது. வரும் 22-ந்தேதி ‘டெக்பா’ பொதுக்குழு கூடுகிறது. இதில் பிரிண்டிங் கட்டண உயர்வு குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றார்.