பழனி அருகே நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
பழனி:
பழனி ஆர்.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மனைவி ராமாத்தாள் (வயது 48). இவர் கடந்த மாதம் 23-ந்தேதி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ராமாத்தாளிடம், ஜவகர்நகர் பகுதிக்கு வழி கேட்டார். அப்போது திடீரென அந்த நபர் ராமாத்தாளின் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை பறித்துவிட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் சந்தன கலர் பேண்ட், நீல நிற சட்டை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் செல்வது பதிவாகியிருந்தது. இதை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீஸ் விசாரணையில் ராமாத்தாளிடம் நகை பறித்தது பழனியை அடுத்துள்ள மானூரை சேர்ந்த சிவா (வயது 28) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று பழனி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த பாபு (25) என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பழனி பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து பாபுவையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 19 பவுன் நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.