செய்திகள்
இந்தியாவை தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா... தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்தது
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 11.08 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கடந்த வாரம் ஒரு லட்சத்தை கடந்தது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1.5 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து, தினசரி பாதிப்பு 1.5 லட்சத்தை கடந்த 2வது நாடு என்ற நிலையை இந்தியா எட்டி உள்ளது.
நேற்று ஒரே நாளில் 839 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதிக்கு பிறகு அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகி உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,81,443 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90584 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 11,08,087 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 25,66,26,850 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,12,047 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் தினசரி புதிய தொற்றுகள் அதிகரிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.