செய்திகள்
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி- 3 பேர் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா தனது வீட்டில் இருந்த பழைய சோபாவை விற்பது தொடர்பாக ஆன்லைன் விற்பனைக்கான இணையதளத்தில் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தைப் பார்த்த மர்ம நபர் ஒருவர், ஹர்ஷிதாவை தொடர்பு கொண்டு பேசி, அவருக்கு பணம் அனுப்புவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து 34 ஆயிரம் ரூபாயை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆன்லைன் மோசடி தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளதாகவும், ஒருவரை தேடி வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கு பற்றி போலீசார் கூறுகையில், “ஹர்ஷிதாவை தொடர்பு கொண்ட பேசிய நபர், சோபாவை வாங்கும் வாடிக்கையாளர் போன்று பேசியுள்ளார். அத்துடன், ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் ஒரு சிறிய தொகையை அனுப்பிய பிறகு, ஒரு பார்கோடை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்படி கூறியிருக்கிறார். அதை ஹர்ஷிதா ஸ்கேன் செய்ததும், அவரது கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.14 ஆயிரம் என இரண்டு தவணைகளாக பணம் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.