செய்திகள்
வங்காளதேச வெளியுறவு மந்திரி அப்துல் மொமன்

இந்திய எல்லையில் நடந்த படுகொலை துரதிர்ஷ்டவசமானது- வங்காளதேச வெளியுறவு மந்திரி வருத்தம்

Published On 2021-11-20 17:21 GMT   |   Update On 2021-11-20 17:21 GMT
இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.
டாக்கா:

இந்தியா-வங்காளதேச எல்லையில் கடந்த 12ம் தேதி இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மாடுகளை கடத்துவதற்காக எல்லையின் இருபுறமும் சுமார் 60 பேர் கொண்ட கும்பல் கூடியது. அவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் ரோந்துக் குழுவினர் தடுக்க முயன்றபோது, அவர்கள் ரோந்து குழுவினர் மீது கற்களை வீசத் தொடங்கினர். இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளால் தாக்கி உள்ளனர். தற்காப்புக்காக எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் எல்லையில் பதற்றத்தை உருவாக்கியது.

இந்திய-வங்காள எல்லையில் நடந்த கொலைகள் துரதிர்ஷ்டவசமானது என்று வங்காளதேச வெளியுறவு மந்திரி ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்தார். இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள், எல்லையின் முன்களப் பகுதியில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று உயர்மட்டத்தில் இருந்து உறுதியளித்த போதிலும், வீரர்கள் தொடர்ந்து கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக அப்துல் மொமன் குற்றம்சாட்டினார்.

‘வங்காளதேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, இந்தியராக இருந்தாலும் சரி, எல்லையில் யாரும் கொல்லப்படுவதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை. இரண்டு அரசுகளும் இதை விரும்பவில்லை. பல்வேறு மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், தற்போது நடந்த கொலை கவலை அளிப்பதாக உள்ளது. இது இந்தியாவுக்கே அவமானம். எல்லையில் கொலை எதுவும் நடக்காது என்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்வார்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றும் வெளியுறவு மந்திரி அப்துல் மொமன் தெரிவித்தார்.
Tags:    

Similar News