செய்திகள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவரும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு டெல்லியில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதில் மருத்துவத்துறையினர் அளப்பறிய பணி செய்துவருகின்றனர். அதிலும், குறிப்பாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவருகின்றனர்.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் சம்பள பிரச்சனை உள்பட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
6-வது மத்திய ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும் உள்பட பல கோரிக்கையுடன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செவிலியர்களின் வேலைநிறுத்தத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள் மற்றும் புற நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர்.