செய்திகள்
தற்கொலை (கோப்புப்படம்)

கிணற்றில் குதித்து தற்கொலை: ஈரோடு தொழில் அதிபர் சாவில் பரபரப்பு தகவல்

Published On 2019-12-04 11:02 GMT   |   Update On 2019-12-04 11:02 GMT
ஈரோட்டில் தொழில் அதிபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாணிக்கம் பாளையம் சக்தி நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). இவர் தறிப்பட்டறை வைத்து நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கனகராஜ் மனவேதனையுடன் காணப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் கனகராஜ் ஈரோடு மொக்கையம் பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள ஒரு கிணற்றின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கனகராஜ் கிணற்றில் குதித்தார். மாலை அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிள் நிற்பதை பார்த்த பொதுமக்கள் இது குறித்து விசாரித்தனர். அதன் பிறகு தான் கனகராஜ் கிணற்றில் குதித்த விபரம் தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் வீரப்பன்சத்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த கனராஜிக்கு வனிதா என்ற மனைவியும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கனகராஜ் தற்கொலை செய்வதற்கு முன்பு தன் கைப்பட கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் “என் இனிய அன்பு நண்பர்களே ஜவுளித் தொழிலுக்கு மத்திய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே என்னுடைய மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம்” என்று எழுதப்பட்டிருந்தது என கூறப்பட்டது. இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கடிதம் உண்மையில் கனகராஜ் கைப்பட எழுதியது தானா? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கனகராஜ் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து புதிய பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. கனகராஜ் தனக்கு சொந்தமான இடத்தில் 16 பவர்லூம் தறிபோட்டு தொழில் செய்து வந்துள்ளார்.

மேலும் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2 வருடத்துக்கு முன்பு காடா துணி உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் கடனை அடைக்க முடியாததால் அவர் மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மேலும் ஒரு அடியாக கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கனகராஜ் தந்தை இறந்துவிட்டார். இதனால் அவர் மேலும் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில்தான் கனகராஜ் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

Similar News