பேஸ்புக் நண்பருடன் பழகுவதை கணவன் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் அய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் . இவரது மனைவி ரேவதி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் ரேவதி செல்போனில் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்தார். இதன் மூலம் திருவாரூரை சேர்ந்த ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் பேஸ்புக் , வாட்ஸ்-அப் மூலம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இதையறிந்த வெங்கடேசன் ரேவதியை கண்டித்துள்ளார். இருப்பினும் ரேவதி பேஸ்புக் நண்பருடன் பழகுவதை நிறுத்தவில்லை.
நேற்றும் பேஸ்புக்கில் நீண்டநேரம் கருத்துகளை பகிர்ந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், மனைவியுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
இதில் மனமுடைந்த ரேவதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த வெங்கடேசன் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.