நெல்லை மாவட்டத்தில் பெண் டாக்டர்கள் உள்பட மேலும் 41 பேருக்கு கொரோனா
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்று கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.
இதில் புதிதாக 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் மாநகர பகுதியை சேர்ந்த 24 பேரும், மானூரில் 4 பேரும், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரத்தில் தலா ஒருவரும் அடங்குவர்.
இன்று மாதிரி எடுக்கப்பட்டதில் 2 பெண் மருத்துவர்களும், நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியரும் அடங்குவர். பாளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கும், பாளையில் ஒரே வீட்டில் 14, 15 வயது சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பையில் 25 வயது இளம்பெண், நெல்லை சந்திப்பில் 70 வயது மூதாட்டி ஆகிய 2 பேரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் இன்று அவர்களுக்கு மீண்டும் தொற்று உறுதியானது.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 16,099 உயர்ந்துள்ளது. நேற்று வரை 15,695 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.