செய்திகள்
விபத்து

மேட்டுப்பாளையம் அருகே விபத்து- வாலிபர்கள் 2 பேர் பலி

Published On 2021-11-14 09:44 GMT   |   Update On 2021-11-14 09:44 GMT
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வாலிபர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சின்ன தொட்டிபாளையம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 35). இவரது மனைவி பிருந்தா(35). இவர்கள் நேற்று இரவு மேட்டுப்பாளையம் சென்று விட்டு மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் ஜடையம்பாளையம் காய்கறி மார்கெட் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே தேரம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த வாசு(21), பாரதி(21) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஜடையம்பாளையம் மார்க்கெட் அருகே வந்தபோது பாபு பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளார். அப்போது, எதிரே வேகமாக வந்த வாசுவின் மோட்டார் சைக்கிளும், பாபுவின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் பாபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே வாசு உயிரிழந்தார். பிருந்தா, பாரதி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News