செய்திகள்
தற்கொலை

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் தற்கொலை

Published On 2020-11-07 09:17 GMT   |   Update On 2020-11-07 09:17 GMT
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரும்பாவூர்:

இடுக்கி மாவட்டம் நரியம்பாரா பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 24), ஆட்டோ டிரைவர். இவர் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். இது குறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கட்டப்பனா போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மனோவை தேடி வந்தனர். இந்த நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 சிறுமி மனமுடைந்து மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் மனோ, கட்டப்பனா போலீசில் திடீரென்று சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், தொடுபுழா கோர்ட்டில் ஆஜர்படுத்தி முட்டம் கிளை சிறையில் அடைத்தனர். அவர் மீது பலாத்காரம் செய்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனோவை காணவில்லை. இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் அந்த சிறை முழுவதும் தேடிப்பார்த்தபோது அவர் கிடைக்கவில்லை. எனவே அவர் தப்பிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் தப்பிச்செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து மீண்டும் சிறை வளாகத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சிறையின் மேல் பகுதியில் கைதிகளின் துணிகளை காயப்போடும் இடத்தில் மனோ தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் மனோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து முட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News