வழிபாடு
ராஜகோபுரத்தில் உதவி கலெக்டர் கவிதா ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகம்: வெளியூர் பக்தர்கள் காலை 10 மணிக்கு பின்னர் அனுமதி

Published On 2022-02-05 09:13 GMT   |   Update On 2022-02-05 09:13 GMT
படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெளியூர் பக்தர்கள் காலை 10 மணிக்கு பின்னர் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஆலோசனை கூட்டத்தில் உதவி கலெக்டர் கவிதா கூறினார்.
கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி ஆரணி உதவி கலெக்டர் கவிதா விழா ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ராஜகோபுரம் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். துணை ஆணையர், செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ராமுவிடம், கும்பாபிஷேக ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.

பின்னர் கோவில் தங்கும் விடுதியில் உதவி கலெக்டர் கவிதா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) ராமு, போளூர் தாசில்தார் சண்முகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், படவேடு ஊராட்சி தலைவர் சீனிவாசன், சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் தரணி, வருவாய் ஆய்வாளர் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சம்பத், ஒன்றிய கவுன்சிலர் தஞ்சிம்மாள்லோகநாதன், முன்னாள் அறங்காவலர்கள் ஆர்.வி சேகர், முத்துக்கண்ணு, காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன், போளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் கூறுகையில், கும்பாபிஷேக விழாவில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் பக்தர்கள், உபயதாரர்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். காலை 10 மணிக்கு பின்னர் வெளியூர் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சந்தவாசல் சாலை, வீரகோவில் சாலை, அனந்தபுரம் சாலையில் போலீசார் வாகனங்கள் கட்டுப்படுத்தி போக்குவரத்து நெரிசல் இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஊராட்சி சார்பில் குடிநீர் வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் முககவசம், சானிடைசர் வழங்கவேண்டும். மின்துறை சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். 2 தீயணைப்பு வண்டிகள் கோவில் அருகே நிறுத்த வேண்டும் என்றார்.

கும்பாபிஷேக விழா மற்றும் யாக சாலை பூஜைகளை https://www.youtube.com/c/templelivestream என்ற யூடியூப் நேரலையில் ஒளிபரப்ப இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முடிவில் கோவில் மேலாளர் மகாதேவன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News