செய்திகள்
பெண்ணாடத்தில் திடீர் மழை: 50 வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
கருங்குழி தோப்பு குடியிருப்பு பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் இளையராஜா, திருவள்ளுவன் உள்பட 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அதனை சுற்றி உள்ள பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. வானமே பிளந்து ஊற்றுவது போல் மழை பொழிந்தது. இதனால் கருங்குழி தோப்பு பகுதி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் இளையராஜா, திருவள்ளுவன் உள்பட 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
பழைய பஸ் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்ததால் பஸ்களுக்கு காத்திருந்த பயணிகள் சிரமப்பட்டனர். சோளம், கடலை, எள்ளு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் இதுபோல் தண்ணீர் வீடுகளுக்குள் வந்து விடுகிறது. இது குறித்து பலமுறை பெண்ணாடம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் நடவடிக்கை இல்லை. கருங்குழி தோப்பு குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வடிகால் வசதி இல்லை, மழை காலங்களில் இதுபோல் வீடுகளில் தண்ணீர் புகுந்து வருவதால் அத்தியாவசிய பொருட்கள் நனைந்து நாங்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது என்றனர்.