செய்திகள்
மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வை விமர்சித்து பரபரப்பு சுவரொட்டி
மதுரையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வை விமர்சித்து சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
மதுரை:
தி.மு.க.வில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக விளங்கியவர் மு.க.அழகிரி. மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த இவர் 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். அதன் பிறகு தி.மு.க. வை விமர்சித்து மு.க.அழகிரி அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
சட்டமன்ற தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக செயல்பட்டனர். தொடர்ந்து புறக்கணிக்ககப்பட்டதால் மு.க.அழகிரி முக்கிய முடிவுகள் எடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் அவர் மவுனம் காத்து வந்தார்.
இதற்கிடையில் அவர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்படுவார் என கருத்து நிலவியது. ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வை விமர்சித்து மீண்டும் சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
மதுரையில் பல்வேறு வீதிகளிலும் இந்த சுவரொட்டிகள் காணப்படுகின்றன. அதில், "அண்ணே... அண்ணே... அழகிரி அண்ணே... நம்ம கட்சி நல்ல கட்சி. மதுரையில இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுன்னே...'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டி தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.