சீர்காழி அருகே விபத்து - வங்கி ஊழியர் உள்பட 2 பேர் பலி
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கீழதென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 42). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.மயிலாடுதுறை அடுத்த மூங்கில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயபாலன் (24).
இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகேயன் , மோட்டார் சைக்கிளில் சட்ட நாதபுரம் ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே விஜயபாலன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காயம் அடைந்த விஜயபாலனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயபாலன் இறந்தார்.
இந்த விபத்து பற்றி சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான கார்த்திகேயனுக்கு திருமணமாகி மனைவியும் 8 வயதில் மகனும் உள்ளனர்.