செய்திகள்
கோப்புபடம்

சேலம் அருகே பள்ளி மாணவி தற்கொலை - போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு

Published On 2020-09-13 09:33 GMT   |   Update On 2020-09-13 09:33 GMT
சேலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் அவரது உடலை எரித்துவிட்டனர்.
சேலம்:

சேலம் அருகே உள்ள வீராணம் துளசிமணியூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், கூலித்தொழிலாளி. இவருடைய மகள் பூர்ணிமா (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சரவணன் தனது மனைவியுடன் பூ பறிப்பதற்காக தோட்டத்துக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது அங்கு பூர்ணிமா தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதை போலீசாருக்கு தெரியப்படுத்தாமல் உறவினர்கள் உதவியுடன் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், பூர்ணிமா, வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் இதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

மேலும் மாணவியின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே போலீசாருக்கு தெரியாமல் உடலை எரித்ததால் பூர்ணிமாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News