உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விசாரணை கைதி மரணம்: போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப்பதிவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2022-05-06 08:29 GMT   |   Update On 2022-05-06 08:29 GMT
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக போலீஸ்காரர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் 65 வயது முதியவர் பழனிசாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள் இருவரும் கொலை செய்யப்பட்டது குறித்தும் பெருந்துறை வட்டத்தில் 68 வயது முதியவர் கே.சி.துரைசாமி கொலை குறித்தும் அவர்களது நகை கொள்ளையடித்தது குறித்தும் விரிவாக பேசினார்.

இதே போல் சென்னையில் போலீஸ் விசாரணையின் போது விக்னேஷ் மரணம் அடைந்தது குறித்தும் பேசினார். விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் உள்ளதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர், விக்னேஷ் மரணம் குறித்தும், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் இந்த அரசினுடைய கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையிலே இங்கே உரையாற்றியிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் வாகன சோதனையின்போது, கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் வைத்திருந்ததையொட்டி, அவர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் விசாரணையின் போது, உடல் நலம் குன்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்பது குறித்து ஏற்கெனவே இந்த அவையிலே சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமல்ல, இந்த அவையில் உள்ள கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் இங்கே பேசியிருக்கிறார்கள்.

அப்போது நான் பதிலளித்துப் பேசிய நேரத்தில், ‘விக்னேஷ் இறப்பு குறித்து “சந்தேக மரணம்” என முறைப்படி வழக்குப் பதிவு செய்து, மேஜிஸ்ட்ரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. விக்னேசின் உடல் 20.4.2022 அன்று மேஜிஸ்ட்ரேட் அவர்கள் முன்னிலையில், மருத்துவக் குழுவினரால் உடற்கூராய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், இது வீடியோ மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும், பிரேத பரிசோதனை முடிவுற்ற பின்னர், அன்றைய தினமே உறவினர்களிடம் முறைப்படி விக்னேசின் உடல் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரத்தை எல்லாம் நான் அன்றைக்குத் தெரிவித்திருந்தேன்.

மேலும், இந்த வழக்கானது, சந்தேக மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ள நிலையில், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பொன்ராஜ், ஊர்க் காவல் படைக் காவலர் தீபக் ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், காவல் துறை இயக்குநர் மேல் விசாரணைக்காக இவ்வழக்கினை 24.4.2022 அன்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். ஆகவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக அரசு எடுத்து வருகிறது என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

தற்பொழுது கிடைத்துள்ள விக்னேசின் உடற்கூராய்வு முடிவுகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, அவருடைய உடலில் 13 இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையிலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

இதன் அடிப்படையில், இன்று இந்த வழக்கானது, கொலை வழக்காக மாற்றப்பட்டு, காவலர்கள் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு, விசாரணையினைத் தொடர்ந்து நடத்திட சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல் நிலைய சரகம், உப்பிலிபாளையம் ஓடைக்காடு பகுதியில் துரைசாமி மற்றும் அவரது மனைவி ஜெயமணி ஆகியோர் 30.4.2022 அன்று அவர்களது தோட்டத்து வீட்டின் வெளிப்பகுதியில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த இருவரையும் தாக்கிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

இச்சம்பவத்தில், காயமுற்ற துரைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜெயமணி பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோன்று, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், தம்பிரெட்டிப்பாளையத்தில் பழனிசாமி மற்றும் அவரது மனைவி வள்ளியம்மாள், அவர்களுக்குச் சொந்தமான ரெட்டிப்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.

அவர்கள் தங்களது வீட்டின் வெளியே உறங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை தாக்கி கொலை செய்து, வள்ளியம்மாள் அணிந்திருந்த சுமார் ஏழரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றிருக்கிறார்கள்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டு இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு சம்பவங்கள் குறித்த முதல் கட்ட விசாரணையில், தாக்குதல் நடந்த விதம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட முறை ஒன்றுபோல் இருப்பதால், இந்த இரண்டு சம்பவங்களில் ஒரே குற்றக் கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிய வருகிறது.

இதுகுறித்து கோயம்புத்தூர் சரக காவல்துறை துணைத் தலைவர் தலைமையிலே, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரையில், காவல் துறையின் சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டும், ஒருசில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க இயலாத நிலை கடந்த காலங்களிலும் இருந்துள்ளது.

இருந்தாலும், இதுகுறித்து காவல் துறை விசாரணை நடைபெற்று வருவதால், இதற்குமேல் இதுபற்றிப் பேசி, நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை நிச்சயமாக, விரைவில் எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படியுங்கள்... கேரளாவை தொடர்ந்து தமிழகத்தை மிரட்டும் ஷவர்மா- 3 கல்லூரி மாணவர்கள் பாதிப்பு

Tags:    

Similar News