செய்திகள்
ராணிப்பேட்டை பகுதிகளில் தொடர்மழை- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராணிப்பேட்டை பகுதிகளில் தொடர் மழை காரணமாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
‘நிவர்’ புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, சிப்காட் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக நேற்று மதியம் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் வங்கிகள், அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை. எனினும் தொழிற்பேட்டையான சிப்காட் பகுதியில் பெரும்பாலான தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கின.
‘நிவர்’ புயலால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து உள்ளன.
ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டாலும், கசிவு ஏற்பட்டாலும் அதனை உடனடியாக தடுக்கும் வண்ணம் மணல் மூட்டைகளை வருவாய்த்துறையினர் தயார் நிலையில் வைத்துள்ளனர்.