செய்திகள்
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு நிலுவை தொகை வழங்க கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ரூ.32 கோடி கரும்பு நிலுவைத் தொகை பாக்கி உள்ளது. விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை வழங்காமல் உள்ளனர். இதுபற்றி விவசாயிகள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். விவசாயிகள் தரையில் அமர்ந்து நிலுவை தொகையை வழங்க கோரி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகிபச்சாவு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். இன்று 4-வது நாளாக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.