செய்திகள்
நோபல் பரிசு

நோபல் பரிசுத்தொகை ரூ.7.33 கோடியில் இருந்து ரூ.8.12 கோடியாக அதிகரிப்பு

Published On 2020-09-25 06:22 GMT   |   Update On 2020-09-25 06:22 GMT
நோபல் பரிசு தொகையாக இதுவரை ரூ.7.33 கோடி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8.12 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்:

நோபல் பரிசு தொகையாக இதுவரை ரூ.7.33 கோடி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த பரிசுதொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்த பரிசை வழங்கும் நோபல் அறக்கட்டளை அறிவித்து உள்ளது. இதன்படி நோபல் பரிசு தொகையின் மதிப்பு ரூ.81 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இதுவரை வழங்கப்பட்டுள்ள ரூ.7.33 கோடி இனி ரூ.8.12 கோடியாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நோபல் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2012-ம் ஆண்டு முதல் நோபல் அறக்கட்டளையின் முதலீட்டு மூலதனம் ரூ.2,438 கோடியில் இருந்து ரூ.3,737 கோடியாக அதிகரித்து உள்ளது. அதிலிருந்து சுமார் 9 சதவீத வட்டி வருவாய் கிடைத்து வருகிறது.

நோபல் அறக்கட்டளையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது நோபல் பரிசின் பண இருப்பை அதிகரிக்க முடிந்தது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோபல் அறக்கட்டளையின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக முன்பு சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2011-ம் ஆண்டு நோபல் பரிசு தொகை ரூ.8.12 கோடியில் இருந்து ரூ.6.50 கோடியாக குறைக்கப்பட்டது.

இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளுக்கான நோபல் பரிசு வரும் அக்டோபர் 5-ந்தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. இதில் அந்தந்த பிரிவுகளுக்கான பரிசு பற்றிய விவரம் இடம் பெறும்.
Tags:    

Similar News