செய்திகள்
மம்தா பானர்ஜி

எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதற்காக மம்தா பானர்ஜி டெல்லியில் முகாம்

Published On 2021-11-22 08:23 GMT   |   Update On 2021-11-22 08:23 GMT
பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். அதன்படி எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் அவர் சந்திக்கிறார்.
புதுடெல்லி:

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

மம்தா பானர்ஜி தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜனதாவுக்கு மேற்கு வங்காள தேர்தல் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த வெற்றி மூலம் பா.ஜனதாவுக்கு மாற்றான தலைவர் மம்தா பானர்ஜி என்ற கருத்து எழுந்துள்ளது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை பிரதமர் வேட்பாளராக களம்நிறுத்த வேண்டும் என்பதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இருக்கிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டால் மட்டுமே அந்த கட்சியை வீழ்த்த முடியும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் அங்கு செல்கிறார்.

பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அதன்படி எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரையும் அவர் சந்திக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார். எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பது தொடர்பாக இந்த ஆலோசனையில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

டெல்லியில் இருக்கும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனது மாநிலத்துக்கு தேவையான நிதியையும் அவர் பிரதமரிடம் கேட்டு பெறுவார் என்றும் தெரிகிறது.
Tags:    

Similar News