உள்ளூர் செய்திகள்
திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
கோவை:
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி காயத்ரி (வயது 25). இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. காயத்ரியின் அண்ணன் வினோத் என்பவர் கோவை சூலூர் அருகே உள்ள சிந்தாமணி புதூரில் வசித்து வருகிறார்.
அங்கு நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த 19-ந்தேதி காயத்ரி தனது கணவருடன் வந்து இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அறிவழகன் தனது மனைவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே சென்றார்.
வீட்டில் தனியாக இருந்த காயத்ரி வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கிய ராஜ் தலைமயிலான போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.