ஆன்மிகம்
தாயமங்கலம் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. ( உள்படம்:-முத்து மாரியம்மன்).

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம்

Published On 2021-04-01 06:44 GMT   |   Update On 2021-04-01 06:44 GMT
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை யொட்டி நேற்று இரவு மின்னொளியில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இளையான்குடி அருகே உள்ளது தாயமங்கலம். இங்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தென் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி இந்த ஆண்டிற்கான இந்த விழா கடந்த 23-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் இரவு சிம்ம வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவையொட்டி நேற்று இரவு மின்சார தீப அலங்காரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் தேர் கோவில் முன்பு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேரை ஏராளமான பக்தர்கள் இழுத்து வந்தனர். தேர் கோவிலை சுற்றி 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலையை வந்தடைந்தது. அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் 2-ந்தேதி காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவுபெற்றது.

Tags:    

Similar News